Thursday, 23 January 2014

பாலாவும் இளையராஜாவும் கூட்டணி....!


பரதேதி வெற்றிக்குப் பிறகு பாலா, தான் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் கரகாட்டத்தின் பின்னணியில் உருவாக உள்ளது.

பரதேசியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை அற்புதமாக இருந்தது. எனவே, சசிகுமார் படத்திற்கும் இசையமைக்க முதலில் ஜி.வி.பிரகாஷ்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம்.ஆனால் ஜி.வி., கொடுத்த பாடல் டியூன்கள் எதுவும் பாலாவுக்கு திருப்தியை கொடுக்கவில்லையாம்.

அதனால ஜி.வி.யை கழற்றிவிட்டு பாலா, மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவிடமே சென்றுவிட்டாராம். இதற்கு முன்பு இளையராஜா, சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய மூன்று பாலா படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இருவரும் இணையும் நான்காவது படம்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க பிரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வித்தியாசமான காதல் கதையை இந்த படத்தில் மேலும் இரு முக்கிய நடிகர்களும் நடிக்க உள்ளனராம். மற்ற விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, சமீபகாலமாக படங்களுக்கு சரியானபடி இசையமைப்பதில்லையாம் ஜி.வி.பிரகாஷ்.

ஆத்துக்கரை அம்மன்!


கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது.

விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந்தக் கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு சென்று நீர்மோர் வார்த்து பக்தர்களுக்கு கொடுத்து வருகிறார் கலியமூர்த்தி. இருபது வயதிருக்கும் போது ஆரம்பித்தது. போனவருடம் வரை எந்தத் தடங்களும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் அது முடியாமல் போய்விடுமோ என்று பயந்து கிடந்தார். கையில் காசும் இல்லை. உடம்புக்கும் முடியவில்லை என்பதை நினைத்தபோது கண்கள் கலங்கி கசிந்தது. ஆடித்திருவிழா காட்சிகள் அவருக்குள் திரையிட்டன. நீர்மோர் என்றால் சாதாரணமாக இருக்காது. அதற்காக மூன்று நாள் முழுமையாக மெனக்கெடுவார்.

திருவிழாவிற்கு முதல் நாளே பக்கத்திலிருக்கிற அத்திப்புலியூர் கிராமத்திற்கு அதிகாலையிலேயே சென்று விடுவார். அங்கிருக்கின்ற பண்ணையில் கறக்கின்ற பாலை தண்ணீர் கலக்காமல் வாங்கி விடுவார். ஐம்பது லிட்டர் பாலை பெரிய கேனில் அடைத்து தளும்ப தளும்ப கொண்டு வருவார். பிறகு மதியம் அந்தப் பாலைக் காய்ச்சி கொஞ்சம் தயிர் கலந்து பிறை ஊத்தி மூடி வைத்து விடுவார்.  மறுநாள் இரண்டு பெரிய சில்வர் கேன்களில் தயிர் ரெடியாகிவிடும். அன்று மாலையே பஸ் பிடித்து கோயிலுக்கு கிளம்பி விடுவார். ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற ஆத்தங்கரை நாச்சியம்மன் கோயிலில் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் விழா ஏற்பாடுகள் தொடங்கிவிடும்.

பொங்கல் வைப்பவர்கள், முடியெடுத்து நேர்த்திக்கடன் செய்பவர்கள், கிடா வெட்டுபவர்கள், சேவல் அறுப்பவர்கள், அலகு குத்தி ஆடுபவர்கள், தேர் இழுப்பவர்கள், தீச்சட்டி தூக்குபவர்கள், காவடி ஆடுபவர்கள், மண்சோறு திண்பவர்கள், மாவிளக்குப் போடுபவர்கள், காது குத்துபவர்கள், கடலை இறைப்பவர்கள் என்று கோயில் களைகட்டும். சின்னக் கோயில் தான் தீர்த்தா நதியின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் மாரியம்மன் தான் ஆத்தங்கரை நாச்சியார். ஒரு பெரிய மொட்டைத் திடலில் தான் விழா நடக்கும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி விட்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவரவர் ஊருக்குப் புறப்பட்டு விடுவார்கள்.

ஒரு புதிய பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டித் தயிரை முகந்து ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலப்பார் கலியமூர்த்தி. கொண்டு வந்திருக்கும் எலுமிச்சை பழங்களை தேவையான அளவுக்கு பிழிந்து ஊற்றுவார். ஒரு ஸ்பூன் எடுத்துக் குடித்து டேஸ்ட் பார்ப்பார். டேஸ்ட் பார்க்கும்போதே புளிப்புக்காக கண்களை இடுக்கிக்கொண்டு நல்ல புளிப்பு... சூப்பரா இருக்கு... இந்தாங்க... முதல் டம்ளர்... குடிங்க... என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுப்பார்.
பச்சை மிளகாய் காரத்திற்கும், கறிவேப்பிலை - கொத்துமல்லி வாசத்திற்கும், நீர் மோர் வாசம் கோயில் முழுக்க மணக்கும். ஒருவருக்கே எத்தனை டம்ளர் வேண்டுமானாலும் கொடுப்பார். சிலபேர் தண்ணீர் பாட்டில்களில் கூட வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள்.

கொளுத்துகிற வெயிலுக்கு இதமாய் நீர்மோர் குடித்துவிட்டு ''ரொம்ப... நல்லாருக்குய்யா'' வருசா வருசம் இந்த ஆத்தங்கரை ஆத்தா புண்ணியத்துல நீர் மோர் வார்த்துக் கொடுத்து நீண்ட நாள் வாழணும்யா... என்று சிலர் வாழ்த்திவிட்டு போகும்போது நீர் மோர் குடிக்காமலேயே வயிறு குளிர்ந்து விடும் கலியமூர்த்திக்கு. தன்னுடைய இரண்டு மகன்களும் கூட இருந்த போது நீர்மோர் கொடுக்க 'கூட மாட' வருவார்கள். அது பெரிய ஒத்தாசையாக இருக்கும். இப்போது இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி வேலை ஜோலி என்று வெளியூர் போய்விட்ட பிறகு மனைவியோடு சில வருடங்கள் திருவிழாவிற்கு சென்று நீர் மோர் கொடுத்து வந்தார்.

''சின்ன மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், குழந்தையை கவனித்துக் கொள்ள மனைவியும் நெய்வேலி போய்விட்டாள். மனைவி கூட இல்லாததுதான் கை முறிந்தது போல இருந்தது கலியமூர்த்திக்கு. ''மனைவி இருந்திருந்தால் காய்ச்சலுக்கு இந்நேரம் கசாயம் வச்சி கொடுத்திருப்பா... வெளிய போய் காசுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிருக்கலாம்... இந்தக் காய்ச்சல் காணாம போற மாதிரி ஏதாவது ஒரு மாயம் பண்ணு... மாரியாத்தா... நீர் மோர் ஊத்தறது நின்று போயிடக்கூடாது... ஆத்தா'' என்று நினைத்தபோதே வாசலில் யாரோ நாலைந்து பேர் வந்து நின்றார்கள்.

இங்க யாருய்யா... கலியமூர்த்தி... நான்தான் கலியமூர்த்தி... நீங்கள்லாம் யாரு....? - காய்ச்சலில் நடுங்கிக் கொண்டே கேட்டார். ஐயா காலைலேந்து இந்த ஊர்ல இலவச மருத்துவ முகாம் நடக்குது. கண் பார்வைக் கோளாறு... கைவலி... கால்வலின்னு... ஊரே நம்ம ஆலமரத்து திடல்ல... கூடியிருக்கு... உங்களுக்கு ரொம்ப முடியலன்னு உங்க பக்கத்து வீட்ல இருக்கிற சரவணன் சொன்னார். அதான் உங்களை விட்லயே பார்த்து சிகிச்சை கொடுத்துடலாம்னு வந்திருக்கோம்.
நூறு டிகிரி ஜுரம் இருக்குய்யா... உங்களுக்கு. சூடுதண்ணில இந்த மாத்திரையை போட்டுக்கோங்க... மூணு வேளைக்குத் தர்றோம். ஒரு வாரத்துக்கு பச்சைத்தண்ணி குடிக்காதீங்க...

மாத்திரை விழுங்கிய கொஞ்சம் நேரத்தில் உடம்பு முழுக்க வியர்த்துக் கொட்டியது. விருட்டென்று எழுந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டார். தலைவலி உடம்பு பாரம் எல்லாம் இறங்கி கொஞ்சம் புதிய காற்றை சுவாசிப்பதுபோல் இருந்தது. காய்ச்சல் போய்டுச்சி ஆத்தா.... காசு மட்டும் தான் வேணும் ஆத்தா, பசங்களும் இன்னும் காசு அனுப்பல... ''நூறு நாள் வேலை'' பார்த்த காசும் இன்னும் அக்கவுண்ட்ல ஏறல... கடைசி வீட்டுக்காரரிடம் போய் கைமாத்து கேட்டுப்பாக்கலாம்... கண்களைத் திறக்க முடியாமல் சுவரில் சாய்ந்தபடியே கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தார் கலியமூர்த்தி.

யாரோ வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வருவதுபோல் தெரிந்தது. கலியமூர்த்தி தாத்தா என்னை ஞாபகம் இருக்கா...? நான்தான்யா... ஒத்த வீட்டு முருகேசன். ''முருகேசா... எப்படிப்பா... இருக்க...? நீ இப்படி ஒரு காரியம் செஞ்சிட்டு ஊரவிட்டு ஓடிப்போய்டுவன்னு நினைக்கலப்பா...'' முருகேசன் இந்த ஊரில் சீட்டுக் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தான். நிறைய பேர் அவனிடம் மாதச்சீட்டு சேர்ந்திருந்தார்கள். கலியமூர்த்தியும் அவர் சக்திக்கு ஏற்ற மாதிரி நூறு ரூபாய் சீட்டு சேர்ந்திருந்தார். எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பத்தாயிரம், இருபதாயிரம் என்று பலபேர் இவனிடம் பணம் கட்டி ஏமாந்து போயிருந்தார்கள்.

கலியமூர்த்தியும் மூவாயிரம் ரூபாய் கட்டியிருந்தார். பல வருசங்களுக்கு முன் ஓடிப்போனவன் இப்போது ஏதோ பதவிக்காக வந்து நிற்கிறான். ''தாத்தா கோச்சுக்காதீங்க தாத்தா... அப்ப இருந்த சூழ்நிலை... பிரச்னை... ஊரைவிட்டு போறதை தவிர வேற வழியில்லாம போய்டுச்சி... தாத்தா... ஆனா... நிச்சயமா உங்களையெல்லாம் ஏமாத்தனும்னு நினைக்கல தாத்தா... ''இன்னைக்கு எல்லாரோட காசையும் கொண்டு வந்திருக்கேன் தாத்தா. முதல்ல உங்களைப் பார்த்துதான் திருப்பிக் கொடுக்கணும்னு வந்திருக்கேன் தாத்தா. உடம்பு சரியில்லாம இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். இந்தக் காசை வெச்சுக்கங்க தாத்தா. உடம்பை பாத்துக்கங்க...''

ஆடித்திருவிழாவிற்கு அம்மன் கோயிலுக்கு போறீங்களா... தாத்தா...? நல்லபடியா போய் மோர் ஊத்திட்டு வாங்க... நான் இன்னைக்கு ராத்திரியே மெட்ராஸ் கிளம்பணும் தாத்தா. நிறைய பேரை பார்த்து பணத்தை திருப்பிக் கொடுக்கணும். இன்னொரு நாள் வர்றப்ப... சாவகாசமா உட்கார்ந்து பேசறேன் தாத்தா...
கலியமூர்த்தி கையில் பணத்தை திணித்து விட்டு வேகமாக போய்விட்டார் முருகேசன். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், இந்த முறை சோதனைமேல் சோதனையாக ஏதோ ஒரு தடை வந்துகொண்டுதான் இருந்தது. இரண்டு கேன்கள் நிறைய தயிரைத் தூக்கிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்தபோது... பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ்கூட இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. பஸ் கிடைக்காமல் பயணிகள் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கும் வெவரம் தெரியாதா...? இன்னைக்கு காலைலேந்து அரசாங்க பஸ் டிரைவர் எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களாம். ரோட்ல ஒரு வண்டியும் ஓடாதாம். ஏதோ அப்பப்ப... ஒரு தனியார் பஸ் தலை காட்டுது... அதுலயும் தாங்க முடியாத கூட்டம். இதுல எப்படி நீங்க இந்த தயிர் கேனை தூக்கிட்டு... அம்பது கிலோ மீட்டர் போய்ச்சேர்றது...? பஸ்சுக்காக காத்திருந்த இன்னொரு பெரியவர் கலியமூர்த்தியிடம் சலிப்புடன் சொல்லிக்கொண்டிருந்தார். ''நைட்டுக்குள்ளே போய் சேர்ந்தாதான் காலைல மோர் ஊத்த முடியும்யா... இப்படி பஸ் காரங்க காலை வாரிவிட்டாங்களே... நான் என்னய்யா... பண்றது, கண்ணீர் முட்டிக்கொண்டே வந்துவிட்டது கலியமூர்த்திக்கு.

நான் ஒண்டியாள்ன்னா... உருண்டு கூட போய்டுவேன்யா... தயிர்க்கேனையும், எடுத்துக்கிட்டு போகணும்யா... ஏழு ஊரு சனங்க தாகம் தணிக்கனும்யா... ஆத்தாளுக்கு இந்தத் தயிர் போய் சேரவில்லைனா என் உயிரே போய்டும்யா... இவ்வளவு தூரம் வந்துட்டேன். இப்படி சோதனை நடக்குதேய்யா... புலம்பித் தள்ளினார் கலியமூர்த்தி. ''ஐயா... அங்க பாருங்க... நீங்க போக வேண்டிய தனியார் பஸ்காரன் வர்றான். போங்க போங்க ஏற்கனவே கூட்டம் ரொம்பி வழியுது... பரவால்ல முட்டி மோதி ஏறுங்க... இதை விட்டீங்கன்னா அந்த ஊருக்கு போக வேற பஸ் இல்லை... ''ஏய் பெரிசு இவ்ளோ பெரிய கேன் வச்சுகிட்டு ஏற முடியாது... தள்ளு... தள்ளு...'' கண்டக்டர் அதட்டினார்.

''தம்பி... சாமி காரியம் தம்பி... ஊரு போய் சேரணும்யா... கொஞ்சம் பெரிய மனசு வை தம்பி.''
''அப்புறம் உன் சாமர்த்தியம் பெருசு...
முடிஞ்சா ஏறிக்கோ...'' பேசிக் கொண்டிருப்பதற்குள் பஸ் புறப்பட்டு விட்டது.
- ஏமாந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார் கலியமூர்த்தி.
- ''ஐயா... நீங்க... ஈ கரைக்கா... போறீங்க...?''
- பக்கத்தில் வந்து ஒரு கார் நிற்க... காரில் இருந்தபடியே கேட்டார் டிரைவர்.
- ஆமா... ஆமா... தம்பி...

''நாங்க இங்க... சவாரி வந்தோம்யா... சவாரி இறக்கி விட்டாச்சு... சும்மாதான் திரும்பிப்போறோம்... வாங்கய்யா... நம்ம கார்ல போலாம்...'' ''கார்ல போற அளவுக்கு காசு இல்ல தம்பி...'' நீங்க ஒண்ணும் கார் வாடகை தர வேணாம்ங்கய்யா. பஸ்சுக்கு கொடுக்கற காசு குடுங்க போதும். ''ஏதோ... டீ.... டிபன்... செலவுக்கு தேறினா போதும்.'' இந்த லக்கேஜை வேற ஏத்திக்கணும் தம்பி... ஏத்திக்கலாம்யா... பின்னாடி டிக்கியில் தூக்கிப் போடுங்க... காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு கழுத்து வியர்வையை துண்டால் துடைத்தபடி முன்னால் பார்த்தார். கார் கண்ணாடியில் அழகாக எழுதப்பட்டிருந்தது. ''ஆத்தங்கரை நாச்சியம்மன் துணை.''

2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாது

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த  முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும்.

2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை.

வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு 10க்கும் அதிகமான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றுபவர்கள், தங்களது அடை யாள சான்று, இருப்பிடச்சான்றுடன், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இவ்வாறு புழக்கத்தில் உள்ள பணத்தை மாற்றுவதும், வடிவத்தை மாற்றி அமைப்பதும் புதிதல்ல. 2011ம் ஆண்டு 25 பைசா நாணயங்கள் செல்லாது என ரிசர்வ் அறிவித்தது. பண வீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறைப்பாக 25 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பின்றி போய்விட்டது.சில கடைக்காரர்களும் அதை வாங்க மறுத்துவிட்டனர்.

அதுமட்டுமின்றி, 25 பைசா மதிப்புக்கு எந்த பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவானது. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.இந்த அறிவிப்பை தொடர்ந்து மக்கள் மூட்டை மூட்டையாக நாணயங்களை கொண்டு வந்து மாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

*  2005க்கு முன்பு வெளியிட்ட எல்லா ரூபாய் நோட்டுகளும் 2014 மார்ச் 31க்கு பிறகு வாபஸ்.
*  கருப்பு பணம், கள்ளநோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை.
*  ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளில் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
*  பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
*  ஜூலை 1ம் தேதி முதல் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது, 10 நோட்டுகளுக்கு மேல் இருந்தால் அடையாளம், முகவரி ஆதாரம் தர        வேண்டும்.
*  புதிய ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால், போலி நோட்டுகளை புழக்கத்தில் விடமுடியாது.
*  இப்போது, 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

சருமத்திற்கு தேவையான பேஷியலின் வகைகள்!

பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தை குறைத்து விடுகின்றனர். இதனால் அழகும், பொலிவும் தொய்ந்து போகும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே பேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் 25 வயது முதல் பேஷியல் செய்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பத்தினாலும், தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பேஷியல் செய்ய வேண்டியது அவசியம். முதலில் பேஷியல் செய்வதற்கு முன்பு என்னென்ன பேஷியலில் பல வகைகள் உள்ளன எந்த எந்த சருமத்தற்கு எந்த வகையான பேஷியல் செய்வது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் மட்டுமே பேஷியல் செய்ய வேண்டும்.

இதில் பல வகை உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உள்ளன. பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், ஹெர்பல் பேஷியல், கால்வானிக் பேஷியல், பேர்ல் பேஷியல், கோல்டு பேஷியல், அரோமா பேஷியல் என பல வகை உண்டு.

கோல்டன் பேஷியல்

இம்முறை பேஷியல் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சருமம் நிறும் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுகள், சுருக்கங்கள் நீக்கப்படும். இதில் முதலில் ஷாதானியம், முட்டை, பன்னீர், முதலிய கலவையை முகத்தில் 10 நிமிடம் தடவ வேண்டும். பிறது அதன் மேல் பால் தெளித்து மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கோல்ட்ஜெல் (அழகு சாதனங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்) தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தினை துடைத்து கோல்ட் பாக் தடவி கண்களை சுற்றி ஷாவீட் என்ற லோஷனை தடவ வேண்டும். கண்களின் மேல் குளிர்ச்சியான பன்னீரை காட்டனில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து துடைத்துவிட்டு ஷா பேஸ் என்ற க்ரீம் தடவ வேண்டும். இதுவே கோல்டன் பேஷியல். இது நன்றாக மாநிலம் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

பேர்ல் பேஷியல்

மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு கோல்டன் பேஷியல் அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பேர்ல் பேஷியல் கிட் என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். அதில் நான்கு வகையாக கிரீம்கள் உள்ளன. அம்முறைபடி செய்தால் முக பொலிவாக மாறும்.

கால்வானிக் பேஷியல்
உலர்ந்த சருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் பேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத்திட்டுகள் டபுள்ஸ்கின், தொங்கு கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு!

சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு -ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த, டேவிட் கிபிங் கூறியதாவது:

மற்றொரு சூரிய மண்டலத்தில், 200 ஒளி ஆண்டு, தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, இந்த புதிய கிரகம், பூமியை விட, 60 மடங்கு பெரிதானது. இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வின், கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'கே.ஓ.ஐ.-314' என, பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை, 104 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

இளநரைக்கு எண்ணெய் குளியல்


சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன் றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும்.  சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது. இளநரைக்கு எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே  தீர்வு காணலாம். இளநரை உள்ளவர்கள் மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன், நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதெல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள். இதை மேலே  குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு  இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து குளிக்கவும்.

இந்த கலவையை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். வாரம் இருமுறை நல்லெண்ணை தேய்த்து  எண்ணெய் குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை  தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வராமல் இருக்கும்.

செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நிறைய எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை  குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும். முடி செம்பட்டையாகாமல் இருக்கும் கருவேப்பிலை பொடி, கறிவேப்பிலையை உணவு  அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும். நரைமுடி வருவதையும் தவிர்க்கலாம்.

சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்: சிவாஜி மகன்கள் நம்பிக்கை!


சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை எதிரே வைக்கப்பட்டள்ள சிவாஜி கணேசன் சிலை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாக கூறப்படும் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இது சிவாஜி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகன்களான தயாரிப்பாளர் ராம்குமார்- நடிகர் பிரபு இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவிற்கே விட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.